குற்றம் குற்றமாக இருப்பதில்லை, கவலைப்பட ஏதுமில்லை!
சில பூக்களுக்கு துர்நாற்றமாகிய குற்றம் உள்ளது .
நீருக்கு நுரையாகிய குற்றம் உள்ளது .
குளம், குட்டை, ஆறு, ஏரி, அருவி, ஓடை
நீர்நிலைகளுக்கு நீர்ப்பெருக்கு - எனும்
வெள்ளமாகிய குற்றம் உள்ளது
கடலுக்குக் கொதித்து எழும் அலை குற்றமாக உள்ளது
பூமிக்குள் பூகம்பம்(நிலநடுக்கம்) குற்றமாக உள்ளது
அதன் நிலத்திற்கு நிலச்சரியவாகிய குற்றம் உள்ளது
ஒளி தரும், வெப்பம் தரும் சூரியனுக்குள்
சுட்டெரியும் அனல், வெயில் குற்றமாக உள்ளது
குளிர் தரும் நிலவுக்கு கடுங்குளிர் குற்றமாக உள்ளது
எல்லாவற்றுக்கும் மேலாக
எங்கெங்கும் பசுமை சேர்க்கும்
மழை தரும் மேகத்திற்கு
இடி மின்னல் குற்றமாக உள்ளது
இதில் கவலைப்பட என்ன இருக்கிறது..
அன்புக்குள் வன்பு இருக்கிறது
அமைதிக்குள் ஆர்பாட்டம், ஆரவாரம் இருக்கிறது
அழகுக்குள் கோரம் இருக்கிறது
இளமைக்குள் முதுமை இருக்கிறது .
எல்லாவற்றிலுமே எப்போதுமே குற்றம் இருக்கிறது .
அன்புக்குள் வன்பு ......
அளவோடு இருக்க வேண்டும் ;நிதானம் வேண்டும்.
அமைதிக்குள் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு .
எச்சரிக்கை வேண்டும்.
ஆழ்கடல் அமைதி
என்றைக்குமான அமைதி அல்ல.
அது ஆர்ப்பரிக்கும் வேளை வந்தால்
'சுனாமி' ....அதுதான் கடல் பெருக்கு
அழகுக்குள் கோரம் .
நடையுடை பாவனை ஒய்யாரத்தில் , மிடுக்கில்
தன் அடக்கம் வேண்டும் .
இளமைக்குள் முதுமை .
இளமை பயணத்தின் நோக்கம் இயலாமை,
எனவே
கதியாகும் இறையைச்
சரணாகதியை .....கைக் கூப்பி தொழுதல் வேண்டும் .
பணிந்து ஏத்து
பக்தி செய்ய
பழக்கி வைக்க வேண்டும் -மதியைத்
துதிக்க வைக்க வேண்டும் ...
வன்பு, ஆரவாரம், கோரம், முதுமை ...
எதிர்மறைகளை எதிர் கொள்ள வேண்டும் ;
அனுமதிக்க வேண்டும் .
கவலைக்கு இங்கு எதற்கு இடம் .
வன்பு அன்பாக மாறும் .
பகை வளர்க்க கூடாது... .
பொறுத்துப் பார்க்க வேண்டும் .
ஆராவரம் ஆர்ப்பாட்டத்திற்குள்
அமைதி பிறக்கும் .
மிதம் வேண்டும் .
மிகைப்படுத்தாமல் இருக்க வேண்டும் .
சினம் சிரிப்பாக மாறும் .
அடுப்பில் வைத்தகாலை
நீர் கொண்ட வெப்பம்பின் தானே தணியும் .
குற்றங்கள் மறக்கப்பட வேண்டும் .
குணங்கள் அறியப்பட வேண்டும் .
குறைகளின் குணம் மாறும் ....நிறம் மாறும்
புரியும் உணர்வு வேண்டும் .
கோரத்துக்குள் அழகு பிறக்கும் .
கூட்டு புழுக்குள் வண்ணத்து பூச்சி .
அருவருப்பு யாருக்கும் வேண்டாம்.
முதுமைக்குள் முதிர்ச்சி பிறக்கும்
பண்பட்ட பக்குவம் வரும்
கைக் கூப்பி தொழும்
ஞானம் சித்திக்கும் .
யாருக்கு வேண்டும்
இங்கு ராச மரியாதை ....!
முதல் மரியாதை !
சேற்றுக்குள் செந்தாமரைகள் .
குப்பையில் குருக்கத்திப் பூக்கள் .
காட்டுக்குள் சந்தன மரங்கள் .
எப்போதுமே இங்கு
கவலைப்பட வேண்டாத
ஒரு ஞானம் என்றும்
மறக்கப்பட்டதாக இருக்கிறது.
(ஆக்கம்: 18/11/2001)
No comments:
Post a Comment